டோக்கியோ ஒலிம்பிக் மகளிர் 69 கிலோ குத்துச்சண்டை காலிறுதிப் போட்டியில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் வெற்றி பெற்று இந்தியாவிற்கு வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் குத்துச்சண்டை போட்டிகளில் மகளிர் 69 கிலோ எடைப் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் லோவ்லினா பார்கோயின் ஜெர்மனி நாட்டின் நடின் ஏப்டெஸை எதிர்த்து மோதினார்.
இதில் லோவ்லினா பார்கோயின் 3-2 என்ற கணக்கில் ஜெர்மனி வீராங்கனையை வீழ்த்தி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார். ஒலிம்பிக்ஸ் குத்துச்சண்டையில் காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றார்.
இந்நிலையில் இன்று நடைபெற்ற காலிறுதிச் சுற்றில் சீன தைபேவின் வீராங்கனை நின் சின் சென் என்பவரை 4-1 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்திய லவ்லினா அரையிறுதிக்கு முன்னேறினார். இதனையடுத்து மகளிர் குத்துச்சண்டையில் 69 கிலோ எடை பிரிவில் இந்தியாவின் பதக்க வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதாவது, குறைந்தபட்சம் வெண்கலம், மேற்கொண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெள்ளி அல்லது தங்கப்பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. அவர் தங்கப்பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் ஏகோபித்த எண்ணம்.