டெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29-ம் தேதி தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்ற வகையில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் உரையாற்றினார். அதைத் தொடர்ந்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அடுத்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதம் அளவுக்கு இருக்கும் என எதிர்பார்ப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2021-2022ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை மக்களவையில் தாக்கல் செய்து உரையாற்றினார். இது அவர் தாக்கல் செய்த 3-வது பட்ஜெட் ஆகும்.
இந்தியாவில் முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பட்ஜெட்டின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, உடனே இணையத்தில் வெளியிடப்படுகிறது. கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், நாடு இதுவரை காணாத நீண்ட ஊரடங்கு, பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டது.
தற்போது கொரோனா கட்டுப்படுத்தப்பட்டு, தொழில், வர்த்தக நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு, பொருளாதார பின்னடைவு மெல்ல மெல்ல மீண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், நிலையான பொருளாதார மறுமலர்ச்சிக்கு வழிவகுக்கும் கொள்கை அறிவிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.