திருவனந்தபுரம்:-
‘தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர்களை பள்ளிக்குள் அனுமதிக்க மாட்டோம்’ என, கேரள அரசு அறிவித்துள்ளது.
கேரளாவில் கடந்த 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டபோது ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கண்டிப்பாக தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது வரை ஆசிரியர்கள் பலரும் தடுப்பூசி போடாமல் உள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து மாநில கல்வி அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது,
பள்ளிகள் திறக்கும் முன் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி ஊழியர்களுக்கு அரசு தரப்பில் தடுப்பூசி தொடர்பாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
எனினும் இதுவரை 5,000க்கும் மேற்பட்டோர் தடுப்பூசி செலுத்தாமல் பள்ளிக்கு வந்து செல்வதாக தெரிகிறது. தடுப்பூசி செலுத்திக்கொள்ளுங்கள் என அவர்களை கட்டாயப்படுத்தவில்லை.
தடுப்பூசி போடப்படாதவர்களில் பெரும்பாலோர் வட கேரள மாவட்டங்களான மலப்புரம் மற்றும் காசர்கோட்டைச் சேர்ந்தவர்கள்.
அதேசமயம் தடுப்பூசி செலுத்தாதவர்களை பள்ளிக்குள் அனுமதிக்க முடியாது. இது மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பான விஷயம் என்பதை அவர்கள் உணர வேண்டும் என்று கூறியுள்ளார்.