புதுச்சேரியில் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றினால் அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் அருண் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைய தொடங்கிய நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் வேகமாக பரவி வருகிறது. அதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் இரவு நேர ஊரடங்கு, வார இறுதி ஊரடங்கு என பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தில் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில் புதுச்சேரி தலைமை செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் அருண், புதுச்சேரியில் கொரோனா நோய் கண்டறியப்பட்டு வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவதாக புகார்கள் வருவதாகவும், அவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட வீடுகளில் இருந்து கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவது கண்டறியப்பட்டால் அவர்கள் மீது எப்.ஐ.ஆர் பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என சுகாதாரத்துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மேலும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகளை கண்காணிக்க சிறப்புகுழு அமைத்து 500 அங்கன்வாடி பணியாளர்கள் பணியில் உள்ளனர். கடந்த 2 வாரத்தில் மட்டும் கொரோனா தொற்று எண்ணிக்கை 20 மடங்கு அதிகரித்துள்ளதாக தெரிவித்தார். மேலும் கொரோனா தடுப்பூசி, தடுப்பு மருந்துகள், ஆக்ஸிஜன் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.