பல்கலைக்கழக துணைவேந்தர்களை மாநில முதலமைச்சரே நியமனம் செய்யும் வகையிலான சட்டத்திருத்தம் தொடர்பாக சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்ற கூட்டத்தொடரின் இரண்டாம் நாளான இன்று ஆளுநர் உரையின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் பேசி வருகின்றனர். அதன்படி பாமகவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜி.கே.மணி பேசிய போது, பல்கலைக்கழக துணைவேந்தர்களை நியமிப்பதில் மாநில அரசுக்கு உரிமை வழங்க வேண்டுமென வலியுறுத்தினார்.
அதற்கு பதிலளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பல்வேறு மாநிலங்களில் இந்த பிரச்சனை நீடித்து வருவதாகவும், பிரதமர் மோடி குஜராத்தில் முதல்வராக இருந்த போது அதற்காக சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டதையும் சுட்டிக்காட்டினார். மேலும் மேற்குவங்கம், கேரளாவில் இந்த பிரச்சனை நீடித்து வருவதை சுட்டிக்காட்டிய அமைச்சர், பல்கலைக்கழக துணைவேந்தர்களை தமிழக அரசே நியமிக்கும் வகையில் சட்ட திருத்தம் கொண்டு வருவது தொடர்பாக சட்ட வல்லுநர்களுடன் ஆலோசித்து வருவதாகவும் தெரிவித்தார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில அரசே பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்கும் விதமாக எதிர்வர உள்ள நிதி நிலை அறிக்கை கூட்டத்தொடரில் தீர்மானம் கொண்டு வரப்படும் என்றும், அதற்கு உறுப்பினர்கள் அனைவரும் ஆதரவளித்து ஒருமனதாக தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.