வண்டாலூர்:-
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கொரோனா தொற்று காரணமாக நீலா என்ற 9 வயது பெண் சிங்கம் உயிரிந்துள்ளது.
மேலும், பூங்காவில் உள்ள 9 சிங்கங்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. பசியின்மை மற்றும் சளித் தொந்தரவு இருந்ததைத் தொடர்ந்து அவற்றின் மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.
கடந்த மே 26ம் தேதி முதல் கோவிட் பரவலால், பூங்கா காலவரையின்றி மூடப்பட்டு, பூங்கா பணியாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். அப்படியிருக்கையில், பணியாளர்கள் மூலமாக விலங்குகளுக்கு கோவிட் தொற்று பரவியுள்ளதா என்பது குறித்து வண்டலூர் பூங்கா நிர்வாகிகள் விசாரிக்கின்றனர்.
சிங்கங்கள் மட்டுமல்லாது மற்ற விலங்குகளுக்கும் ஏதேனும் நோய் அறிகுறிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், விலங்கினங்களை தனிமைப்படுத்தும் பணிகளும் நடக்கிறது.
இதற்கு முன்பு ஸ்பெயினின் பாா்சிலோனா, அமெரிக்காவின் பிராங்க்ஸ் நகரங்களில் உள்ள உயிரியல் பூங்காக்களில் சிங்கங்கள் மற்றும் புலிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் இதற்குமுன் தெலங்கானா, ஹைதராபாத்தில் உள்ள விலங்கியல் பூங்காக்களின் சிங்கங்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.