கிட்டத்தட்ட 16 ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக மீண்டும் மாலத்தீவில் இருந்து திருச்சிக்கு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வருவதற்காக சிறப்பு விமானங்கள் கடந்த ஆண்டு முதல் இயக்கப்பட்டு வருகிறது.
எனினும், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மஸ்கட், ஓமன், துபாய், சிங்கப்பூர், மலேசியா, தோகா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு சிறப்பு மீட்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் இதுவரை மாலத்தீவுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில் முதன் முறையாக வந்தே பாரத் திட்டத்தின் கீழ் மாலத்தீவில் இருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் 146 பயணிகளுடன் திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
முதன் முதலாக மாலத்தீவில் இருந்து வந்த விமானத்துக்கு திருச்சி விமான நிலையத்தில் 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து (வாட்டர் சல்யூட்) வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின்னர், அந்த விமானத்தில் வந்த பயணிகளுக்கு விமான நிலையத்தில் விமான நிறுவனம் சார்பில் பூச்செண்டு கொடுத்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதையடுத்து திருச்சியிலிருந்து மாலத்தீவுக்கு மாலத்தீவில் இருந்து திருச்சிக்கும் விமான சேவை தொடர வேண்டும் என்று டெல்டா பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
வந்தே பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மாலத்தீவு, சார்ஜா, கோலாலம்பூர், துபாய் உள்ளிட்ட நாடுகளுக்கு விமானங்கள் புறப்பட்டு சென்றது. அதேபோன்று தோகா, ஷார்ஜா, துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர், மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளிலிருந்து சிறப்பு விமானங்கள் திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.