எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணியை தொடர்ந்து 4-வதாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புப் போலீஸார் சோதனை.
முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வந்த புகாரின் அடிப்படையில் புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் உள்ள அமைச்சரின் வீடு, திருவேங்கைவாசலில் உள்ள அவரது கல்குவாரி, இவரது குடும்பத்தினருக்கு சொந்தமான மேட்டுசாலையில் உள்ள கல்வி நிறுவனம் உள்ளிட்ட 29 இடங்களில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் இன்று (அக்.18) அதிகாலையில் இருந்து அதிரடியாக சோதனை செய்து வருகின்றனர்.
இதேபோன்று, புதுக்கோட்டை, ஆலங்குடி என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைச்சரின் நெருங்கிய கட்சி பிரமுகர்கள், அரசு ஒப்பந்ததாரர்கள், கல்வியாளர்கள் வீடுகள் என மாவட்டத்தில் 23-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடைபெற்று வருகிறது. இவை உட்பட தமிழகத்தில், கோவை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி என மொத்தம் 43 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
கடந்த ஆட்சியில் மருத்துவமனைகளுக்கு மருத்துவ உபகரணங்கள் வாங்கியது, அனுமதி வழங்கியது, கொரோனா பரவல் தடுப்புக்காக மருத்துவ உபகரணங்கள் வங்கியதில் பல்வேறு மோசடி நடந்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மேலும், கல்குவாரியில் அரசு நிர்ணயித்த அளவைவிட பலநூறு மடங்கு அதிகமாக கல் வெட்டி எடுத்துள்ளதாகவும் தகவல் வெளியானது. அதோடு, சட்டப்பேரவைத் தேர்தலின்போது தாக்கல் செய்யப்பட்ட விஜயபாஸ்கர், மனைவி ரம்யா, மகள்கள் பெயரிலான அசையும், அசையா சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட விவரங்கள் அடிப்படையிலும் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
இலுப்பூரில் உள்ள விஜயபாஸ்கரின் வீட்டின் முன்பு அதிமுகவினர் ஏராளமானோர் திரண்டுள்ளனர். சோதனைக்கு இடயூறாக இருப்பதாகக் கூறி இவர்களை போலீஸார் வெளியேற்றினர். இதனால், போலீஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
சோதனை முடிவுக்குப் பின்னரே, யார் யார் வீட்டில் இருந்து என்னென்ன கைப்பற்றப்பட்டன போன்ற விவரங்கள் தெரியவரும். இந்த சோதனையானது இரவு வரை கூட தொடரும் எனவும் ஊழல் தடுப்பு பிரிவுனர் கூறுகின்றனர்.
எம்.ஆர் விஜயபாஸ்கர், எஸ்.பி வேலுமணி, கே.சி வீரமணியை தொடர்ந்து 4-வதாக, முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.