முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 4 கோடியே 81 லட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க 2017ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்ட நிலையில் அப்போலோவில் அனுமதிக்கப்படுவதற்கு முன் இருந்த ஜெயலலிதாவின் உடல்நிலையில் தொடங்கி, சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் முதலமைச்சர், அரசு அதிகாரிகள் என விசாரணை நீண்டது. அனைத்து விசாரணைகளும் முடிந்த நிலையில் 608 பக்கங்கள் கொண்ட அறிக்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி சமர்பித்தார்.
அதன்படி சசிகலா, மருத்துவர் சிவகுமார், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது விசாரணை மேற்கொள்ள அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்துக்கு ஆன செலவுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி நீதிபதி மற்றும் அலுவலர்களின் ஊதியம், மருத்துவம், வாடகை, பயணச் செலவுகள், தொலைபேசிக் கட்டணம், வாகன பராமரிப்பு, அரசு வழக்கறிஞர்கள் கட்டணம், ஒப்பந்த ஊதியம் என 4 கோடி ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.