கனமழை எச்சரிக்கை காரணமாக மழையால் பாதிக்கப்படும் குடும்பங்களுக்கு தலா 1000 ரூபாய் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் என ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுவடைந்து நேற்று மாலை மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது. இதன் தாக்கம், தெற்கு ஆந்திரா, ராயலசீமா மற்றும் கடலோர ஆந்திரப் பகுதிகளில் அதிகம் காணப்பட்டது.
இதனால் தமிழக எல்லையை ஒட்டியுள்ள சித்தூர், நெல்லூர் மாவட்டங்களில் காளஹஸ்தி, திருப்பதி, தடா, சூளூர்பேட்டை, ஸ்ரீஹரிகோட்டா போன்ற பகுதிகளில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் ஏரிகள், குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பின.
மழையினால் பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரு குடும்பத்திற்கும் தலா 1,000 ரூபாய் உடனடி நிவாரணம் வழங்கப்படும் என முதலமைச்சர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லூர், சித்தூர், கடப்பா மற்றும் பிரகாசம் ஆகிய மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி காணொலி காட்சி மூலம் ஆலேசானை நடத்தினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி மையம் அமைக்கவும், மற்ற துறைகளுடன் ஒருங்கிணைந்து வெள்ளம் பாதித்த பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றவும் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.