கடலூர்:
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த டி.வி.புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பரசுராமன் (50)கடந்த 7 மாதங்களுக்கு முன்பு ஈரோடு பெருந்துறையில்,MLA உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கூட்டாக நடத்தும் இன்ப்ராடெக்ஸ் என்ற கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிக்கு சேர்ந்தார். அவருக்கு நான்கு மாத ஊதியம் 46,000 ரூபாய் நிலுவையில் இருந்துள்ளது.
சம்பளத்தை கேட்டதற்கு அந்நிறுவனத்தின் மேலாளர் செல்வகுமார் , இளங்கோவன் , தேவேந்திரன் , பாதுகாப்பு அதிகாரி ஈஸ்வரன் உள்ளிட்டோர் அவரை திட்டி கடுமையாக தாக்கி கட்டிவைத்து உணவு கூட கொடுக்காமல் சித்திரவதை செய்ததாக பரசுராமன் குற்றம் சாட்டியுள்ளார் .
அதனைத் தொடர்ந்து அவர் பணியில் இருந்த போது பெருந்துறை காவல் நிலையத்திலிருந்து ஆறுமுகம் என்ற சப்-இன்ஸ்பெக்டர் தொலைபேசியில் அழைத்து, ஓட்டுநர் உரிமம், சம்பள பாக்கி தன்னிடம் உள்ளதாகவும், தனியார் நிறுவனத்தினர் பேருந்தை திருடிச் சென்றுவிட்டதாக புகார் அளித்துள்ளனர் என்றும் அதனால் பேருந்தை ஒப்படைத்துவிட்டு ஊதியத்தை வாங்கிச் செல்லுமாறு தொலைபேசியில் கூறியுள்ளார்.இதனால் சந்தேகம் அடைந்த பரசுராமன் விருத்தாச்சலம் நீதிமன்ற வளாகத்தில் பஸ்-ஐ நிறுத்திவிட்டு வழக்கறிஞர் அருள்குமார் முன்பு ஆஜரானார். தனது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்றும், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு அந்த நிறுவனமும், பெருந்துறை சப் இன்ஸ்பெக்டர் ஆறுமுகமும் தான் காரணம் என கூறியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர் அருள்குமார், பரசுராமனை விருதாச்சலம் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். தொடர்ந்து போலீசார் பரசுராமனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர் கடத்தி வந்த தனியார் நிறுவனத்தின் பஸ் விருத்தாச்சலம் நீதிமன்றத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.