தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, ஆந்திர கடலோர பகுதிகளை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று தெற்கு ஒடிசா பகுதிகளில் வலுப்பெற்று நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு இழக்கக்கூடும் எனவும் இதனால் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 15ஆம் தேதி வரையிலும் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தமிழகத்தில் திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையை பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கேரள-கர்நாடக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப்பகுதிகள், இலங்கை கடற்கரையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல், மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 14ஆம் தேதி வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்லவேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.