சென்னை:-
சென்னை வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலுக்குச் சென்றுவந்த தம்பதியினருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கும் பரிசோதனை நடந்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.
கடந்த மாதம் வேளச்சேரியில் உள்ள பீனிக்ஸ் மாலில் உள்ள Life Style ஆடையகத்தில் பணியாற்றிய நபர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து பீனிக்ஸ் மால் சென்று வந்தவர்கள், அந்த வளாகத்தில் பணியாற்றிய அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் பீனிக்ஸ் மால்-க்கு மார்ச் 10ம் தேதி முதல் மார்ச் 17ம் தேதி வரை சென்று வந்தவர்கள் அதிகாரிகளை தொடர்பு கொண்டு தகவலை தெரியப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.
இந்நிலையில் சௌகார்பேட்டை மிண்ட் தெருவை சேர்ந்த கணவன், மனைவி ஆகியோர் காய்ச்சல் காரணமாக மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். தம்பதிகள் இருவரையும் பரிசோதித்ததில் அவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று தெரியவந்தது.
இதில் கணவர் டெல்லிக்கு வியாபார நிமிர்த்தமாக சென்றுவிட்டு ஃபீனிக்ஸ் மால்-க்கும் சென்று வந்தவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து தம்பதிகளின் இரண்டு குழந்தைகளுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அத்துடன் அந்த தம்பதியுடன் யார் யார் தொடர்பில் இருந்தார்கள் என்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
அந்த தம்பதி வசித்து வரும் மிண்ட் தெருவை அதிகாரிகள் மூடி சீல்வைத்தனர். அப்பகுதி முழுவதும் தீவிர கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
அங்கு கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையே சென்னை மண்ணடி மரைக்கான் தெருவில் இரண்டு பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் அந்த தெருவும் சீல் வைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு வளைத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.