சென்னை:-
கறுப்பர் கூட்டம் என்ற யூடியூப் சேனலில் கந்தஷ்டி கவசம் குறித்து இழிவுப்படுத்தும் வகையில் பேசியதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனல் முடக்கப்பட்டதோடு அதன் நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். மத உணர்வுகளை காயப்படுத்தும் வகையில் யார் பேசினாலும் கடும் நடவடிக்கை பாயும் என அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டது.
கந்தசஷ்டி கவசம் தொடர்பாக பல்வேறு தரப்பிலிருந்தும் கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் கந்தசஷ்டி படிக்கும் வீடியோவை தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டு எம்மதமும் சம்மதம் எனத் தெரிவித்துள்ளார்.
இவர் வெளியிட்ட பதிவில் வருடந்தோறும் கார்த்திகை மாதம் 6 நாட்களும், கந்தர் சஷ்டி விரதம் இருப்பது எங்கள் வழக்கம். இன்று ஆடி மாதம் சஷ்டி விரதத்தை முன்னிட்டு, கந்த சஷ்டி கவசம் படித்தேன்.
ஒவ்வொரு மதத்தினருக்கும் அவர்கள் மதத்தின் மீது நம்பிக்கை உண்டு. அடுத்தவரின் நம்பிக்கையை மற்றவர்கள் இழிவுபடுத்துவது தவறு. எம்மதமும் சம்மதம்.
#தமிழ்கடவுள்முருகனுக்குஅரோகரா என பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் கடவுள் நிந்தனை மற்றும் மத துவேஷம் தொடர்பாக கருத்துக்களுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்ததோடு #கந்தனுக்கு_அரோகரா என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.