திமுக பிரமுகரின் காரின் கண்ணாடியை உடைத்து ரூ 4 லட்சம் கொள்ளை அடித்துச் சென்ற திருச்சி கொள்ளையனை போலீசார் கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே நெறிஞ்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவர் திமுக வர்த்தக அணி மாவட்ட துணைச் செயலாளர் உள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ரூ 4 லட்சத்து 60 ஆயிரத்தை வங்கியில் எடுத்துள்ளார். இதில் 60ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு ரூ 4 லட்சத்தை காரின் முன்பக்க இருக்கையில் வைத்து விட்டு காரை பொன்னமராவதி பேருந்து நிலையம் உள்புறத்தில் நிறுத்தி விட்டு எதிரே உள்ள ஜவுளி கடைக்கு சென்று திரும்பிய போது காரின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டிருந்த ரூ 4 லட்சம் கொள்ளை அடிக்கப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
புதுக்கோட்டை எஸ்.பி பாலாஜி சரவணன் பொன்னமராவதி டிஎஸ்பி செங்கமலக்கண்ணன் மேற்பார்வையில் குற்றப்பிரிவு போலீசார் அடங்கி தனிப்படை அமைத்து கொள்ளையனை தேடிவந்தனர். இந்த நிலையில் பொன்னமராவதி- புதுக்கோட்டை சாலையில் வெங்களமேடு என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது மோட்டார் பைக்கில் வந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்தபோது முன்னுக்குப் பின்னாக கூறியுள்ளார்.
இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் விசாரணை செய்த போது திருச்சி செல்வபுரம் சந்திரன் மகன் சரவணன்(32) என்பதும் காரின் கண்ணாடியை உடைத்து பணம் திருடியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து போலீசார் கொள்ளையன் சரவணனை கைது செய்து அவனை திருமயம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பட்ட பகலில் பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் கார் கண்ணாடியை உடைத்து பணம் திருடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.