சென்னை
தமிழகத்தில் அதிகளவு சாலை விபத்துகள் ஏற்படுவதை தடுப்பதற்கான நடவடிக்கை, சாலைகளின் வடிவமைப்பு, சாலை விபத்துகள் குறித்து சிறப்பு சட்டங்கள் இயற்றுவது மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் செயல்படுத்துவது குறித்து முதல்வர் முக. ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
.
உலகிலேயே சாலை விபத்துகளில், அதிகம் உயிரிழப்போரின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகமென புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு, உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காததால், பலர் உயிரிழக்க நேர்கிறது.
இதைக் கருத்தில் கொண்டு, இன்னுயிர் காப்போம் திட்டம் எனும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இத்திட்டத்தின்படி சாலை விபத்துகளில் பாதிக்கப்படுவோருக்கு, முதல் 48 மணி நேரம் இலவச சிகிச்சை அளிக்கப்படும்.
இதற்காக நபர் ஒருவருக்கு ரூ. 1 லட்சம் வரம்புக்குள் 81 தேர்ந்தெடுக்கப்பட்ட மருத்துவ முறைகள் செயல்படுத்தப்பட உள்ளன. இது மற்ற மாநிலங்கள் மற்றும் நாடுகளைச் சேர்ந்தவர்களையும் உள்ளடக்கும். இதற்காக தமிழகம் முழுவதும் இருந்து 609 மருத்துவமனைகள் கண்டறியப்பட்டுள்ளது.
இன்னுயிர் காப்போம் திட்டத்திற்காக முதல் கட்டமாக 50 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது. மேலும் சாலைப் பாதுகாப்பை மக்கள் இயக்கமாக மாற்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களை தமிழக அரசு ஈடுபடுத்தும் என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.