சென்னை:-
சென்னையில் 2015இல் பெய்ததை விட, வரும் ஆண்டுகளில் 10 மடங்கு அதிக மழை பெய்யவும், அதனால் பெருவெள்ளம் ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாக சென்னை ஐ.ஐ.டி. எச்சரித்துள்ளது.
காலநிலை தொடர்பான ஆய்வு (Climate Modelling Study) ஒன்றினை சென்னை ஐ.ஐ.டி (IIT-M) ஆய்வாளர்கள் மேற்கொண்டனர். இதில் பசுமை இல்ல வாயு அதிகளவு வெளியேற்றப்படுவதன் காரணமாக 2015 ஆம் ஆண்டு சென்னையில் பெய்த மழையை விட 10 மடங்கு அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
2015 நவம்பர் 30 முதல் டிசம்பர் 4 வரை சென்னையில் அதிகபட்சமாக 33.32 சதவீதம் மழை பதிவானது. இதனால் பெரு வெள்ளம் ஏற்பட்டது.
இந்நிலையில் சென்னை, மும்பை, திருவனந்தபுரம், கொல்கத்தா, விசாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர நகரங்களில் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் தாக்கம் மற்றும் அதில் இருந்து மீள்வதற்கான அவசியம் குறித்த ஆராய்ச்சியை சென்னை ஐ.ஐ.டி.யின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை மேற்கொண்டது.
அதன் முடிவுகளில், பருவநிலையில் செயற்கையாக திணிக்கப்படும் மாற்றங்கள், சென்னையில் 2015-ம் ஆண்டு பெய்ததை விட, வரும் ஆண்டுகளில், 10 மடங்கு அதிகமாக 233.9 சதவீதம் அளவுக்கு மழைப்பொழிவு ஏற்படவும், அதனால் பெருவெள்ளம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கரிம வாயு வெளியேற்றத்தால் ஏற்படும் காலநிலை மாற்றம் காரணமாக புறப்பரப்பு வெப்பநிலை (Surface Temperature) மற்றும் காற்றின் ஈரப்பதம் (Moisture Content) ஆகியவை ஒரு பகுதியில் தொடர்ந்து அதிகரித்து மிக அதிக கன மழையை தோற்றுவிக்க வாய்ப்புள்ளதாக இந்த ஆய்வுகள் மூலமாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த முன்கணிப்புகள் 2075 ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிகிறது.
‘கடலோரப் பகுதி கட்டமைப்பில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் மற்றும் அதனை தழுவும் யுத்தி’ (Climate change impacts on coastal infrastructure and the adaptation strategies) என்ற தலைப்பின் கீழ் மேற்கொள்ளப்படும் ஆய்வின் ஒரு பகுதியாக இந்த தகவல் தெரியவந்துள்ளது ன. இந்த ஆய்வு SPLICE என்ற காலநிலை மாற்ற செயல் திட்டத்தின் (SPLICE-climate change programme) கீழ் ஐ.ஐ.டி-ன் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் (Department of Science and Technology) நிதி உதவியோடு P.ஜோதிஷ்குமார் மற்றும் PV.கிரன் ஆகிய இரண்டு ஆய்வாளர்கள் மூலமாக மேற்கொள்ளப்படுகிறது.