தமிழகத்தில் ஏப்ரல் 6 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்க துவக்கியுள்ளது. அனைத்து கட்சி தலைவர்களுக்கும் தங்களின் அனல் பறக்கும் பிரச்சாரங்களை தொடங்கியுள்ளனர்.
அந்தவகையில் தமிழகத்தில் தனது முதல் கட்ட சுற்றுப்பயணத்தை அண்மையில் மேற்கொண்டிருந்தார் ராகுல் காந்தி. அப்போது, கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் மாவட்டங்களுக்கு சென்றார். அங்கு அவருக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இது தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு நல்ல உற்சாகத்தை அளித்தது.
இந்நிலையில் தனது இரண்டாம் கட்ட பிரச்சாரத்தை இன்று முதல் மேற்கொள்ளவுள்ளார் ராகுல் காந்தி. அதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் திருவனந்தபுரம் விமான நிலையம் வரும் ராகுல் காந்தி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூத்துக்குடி வருகிறார். பின்னர், வழக்கறிஞர்கள், உப்பளத் தொழிலாளர்களுடன் கலந்துரையாடும் அவர், தேர்தல் பரப்புரை மேற்கொள்கிறார். அதனையடுத்து நாங்குநேரி தொகுதியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கவுள்ளார்.