தமிழகத்தில் செப்டம்பர் 1ம் தேதி முதல் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காக பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நாடுமுழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. சில மாநிலங்களில் மட்டும் 10, 12ஆம் வகுப்புத் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்தது. ஆனால், மாணவர்கள் சிலர் கொரோனாவில் பாதிக்கப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளிகள் மூடப்பட்டன.
இந்நிலையில், தற்போது தொற்று குறைந்துள்ளதால் தமிழகத்தில் செப்டம்பர் 1-ந் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் திறக்கப்பட இருக்கின்றன.
இந்த நிலையில், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை ஆலோசனை நடத்த உள்ளார். இதில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த ஆலோசனை கூட்டத்தில், தற்போதைய கொரோனா பரவல் நிலவரம், பள்ளி மற்றும் கல்லூரிகள் திறப்பிற்கான வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கும் விதம் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.
இது தவிர, கொரோனா அறிகுறி உள்ள மாணவர்களை எவ்வாறு கண்டறிவது, அவர்களை எவ்வாறு நடத்துவது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிகிறது.
இதனிடையே பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட உள்ள சூழலில் ஆசிரியர்களில் 90.11 சதவீதம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.