கொரோனாவின் மூன்றாவது அலையைத் தடுப்பதற்காக தமிழகத்தில் இன்று 18வயதுக்கு மேற்பட்டோருக்கான இரண்டாம் கட்ட மெகா தடுப்பூசி முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக கடந்த 12ஆம் தேதி 40ஆயிரம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு, 20இலட்சம் பேருக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பொதுமக்களின் வரேவேற்பினால் 28 இலட்சத்திற்கும் அதிகமானோர்க்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதனைத்தொடர்ந்து 17ஆம் தேதி தடுப்பூசி முகாம் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தடுப்பூசி பற்றாக்குறையின் காரணமாக இன்று தடுப்பூசி முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் மையங்களில் மெகா தடுப்பூசி முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மட்டும் 1600 இடங்களில் முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி உள்ளன. தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், பள்ளிகள் என 20ஆயிரம் மையங்களில் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. பல இடங்களில் பரிசுப் பொருட்களை அறிவித்து மக்களை அதிகளவில் தடுப்பூசி செலுத்துக் கொள்ள ஊக்கப்படுத்தி வருகின்றனர். சா.கற்பகவிக்னேஷ்வரன்