சென்னை
கொரோனா தொற்று பரவலுக்கு முன்பாக தமிழக சட்டசபை கூட்டம் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் நடந்தது. தற்போது 1¾ ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சென்னை புனித ஜாா்ஜ் கோட்டையில் ஜனவரி 5-ந்தேதி சட்டசபை கூடுகிறது.
கொரோனா தொற்று குறைந்த நிலையில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் 2022ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் ஜனவரி 5-ந் தேதி தொடங்குகிறது. முதல் நாளில் கவர்னர் ஆர்.என்.ரவி உரையாற்ற இருப்பதாக சபாநாயகர் அப்பாவு நேற்று தெரிவித்தார்.
கவர்னர் உரையைத் தொடர்ந்து பொது பட்ஜெட், மானிய கோரிக்கைகள் ஆகியவற்றிற்கான கூட்டத்தொடர்களும் அடுத்தடுத்து நடைபெறும்.
வரும் சட்டசபை கூட்டத்தொடரின்போது தொடுதிரைகள் கண்டிப்பாக அனைத்து உறுப்பினர்களின் மேஜையிலும் வைக்கப்பட்டிருக்கும். காகிதமில்லா பட்ஜெட்டாக சட்டசபையை தொடங்கினோம்.
அதுபோன்றே எல்லா சட்டசபை பணிகளும் காகிதமில்லாமல் தொடுதிரை உதவியுடன் நடத்தப்படும்.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்வது உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சட்டசபை செயலகத்தின் கவனத்தில் உள்ளன. அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன என சபாநாயகர் அப்பாவு தெரிவித்தார்.