பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி கர்ப்பமாக இருந்த மாணவி, தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி, சென்னையில் உள்ள பழங்குடியின் உண்டு உறைவிட பள்ளியில் தங்கி 11ம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு உடல் நிலை சரியில்லாமல் போகவே பெற்றோர் மாணவியை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு, தனது வீட்டில் தனியாக இருந்த சிறுமி எலி மருந்தைச் சாப்பிட்டு வாந்தி எடுத்துள்ளார்.
உடனடியாக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுமி ஆறு மாத கர்ப்பமாக இருப்பதாக பெற்றோரிடம் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர், திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்துள்ளனர். போலீசார் நடத்திய விசாரணையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 31 வயது திருமணமான இளைஞர் ஹரிபிரசாத், மாணவியிடம் ஆசைவார்த்தைகளைக் கூறி பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியது தெரியவந்துள்ளது.
மேலும் மாணவி பயின்ற உண்டு உறைவிடப் பள்ளியைச் சேர்ந்த விடுதி வார்டனும், ஆசிரியர் ஒருவரும் மாணவியின் கர்ப்பம் குறித்த தகவலை மறைத்ததும் தெரியவந்துள்ளது.இதைத் தொடர்ந்து மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கிய இளைஞர் ஹரிபிரசாத் உட்பட மூன்று பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளனர்.