சென்னை:-
தமிழகத்தில் அடையாள அட்டை வைத்துள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு ஊரடங்கு கால நிவாரண நிதியாக தலா ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில்:-
கொரோனா நோய் தொற்று பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுப்பதோடு மட்டுமல்லாமல், ஏழை,எளிய மக்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியும், பொருளாதார மீட்பு நடவடிக்கைகளை முனைப்புடன் செயல்படுத்தியும் வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் சிகிச்சைக்கு பின் குணமடைந்து வீடு திரும்புவோர் சதவீதம் நாட்டிலேயே அதிகமாகவும், நோய் தொற்றினால் ஏற்படும் உயிரிழப்புகள் குறைவாகவும் உள்ளது.
கொரோனாவை தடுப்பதற்காக மத்திய அரசு இந்தியா முழுவதும், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ், ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியதை தொடர்ந்து, தமிழக அரசும் ஜூன் 30 வரை ஊரடங்கை அமல்படுத்தியது.
ஊரடங்கு காலத்தில் மாற்று திறனாளிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, தமிழகத்தில் மாற்று திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள சுமார் 13.35 லட்சம் மாற்றுத் திறனாளிகளுக்கு தலா ஆயிரம் ரூபாய் ரொக்கம் நிவாரணமாக வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் தெரிவித்துள்ளார்.