சென்னை:-
கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுமைக்கும் ஊரடங்கு மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு இருக்கிறது. இன்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார். இந்த கூட்டத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிக்கலாமா? என்பது குறித்து முடிவெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது .
இந்த நிலையில் தமிழகத்தைப் பொறுத்தவரை தற்பொழுது 144 தடை உத்தரவு அமலில் இருக்கிறது. இன்னும் பல பகுதிகளில் மக்கள் கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் தடையை மீறி வெளியே சென்று வந்த வண்ணம் உள்ளனர்.
தடையை மீறி வெளியே வரும் நபர்கள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்கின்றனர். மேலும் அவர்களுடைய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படுகிறது.
தற்போது வரை தமிழகத்தை பொறுத்த வரை 144 தடை உத்தரவை மீறியதாக மூன்று லட்சத்து 34 ஆயிரத்து 549 பேர் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருக்கிறார்கள்.
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக இதுவரை 3 லட்சத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் இரண்டு லட்சத்து 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
மேலும் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை அந்தந்த உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் பணி கடந்த 16ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் இதுவரை ஊரடங்கு மீறி வெளியே வந்த நபர்களுக்கு 3.33 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.