தமிழகம் முழுவதும் பல மண்டலங்களில் பேருந்து சேவைகள் தொடங்கியுள்ள நிலையில் தேவைப்பட்டால் அரசு பேருந்துகளை வாடகைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல் போக்குவரத்து சேவைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது, இந்நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் தவிர்த்து ஆறு மண்டலங்களில் போக்குவரத்து சேவை தொடங்கியுள்ளது.
பல மாவட்டங்களில் அரசு பேருந்துகள் வழக்கம்போல இயங்க தொடங்கியிருக்கும் நிலையில் பயணிகள் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. அதேசமயம் அதிகமான பயணிகள் இல்லாத சூழலில் தனியார் பேருந்து சேவைகள் பல நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் நிறைய மக்கள் குறிப்பிட்ட இடத்திற்கு செல்ல வேண்டிய தேவை இருக்கும் பட்சத்தில் அரசு பேருந்துகளை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தனியார் நிறுவனங்கள், பொது மக்கள் மற்றும் குழுவாகப் பயணிக்க விருப்பமுள்ளோர் அந்தந்த மாவட்ட கிளை மேலாளர், அரசு விரைவு போக்குவரத்து நேர கண்காணிப்பாளர் அலுவலகங்களை அணுகி எத்தனை நபர்கள் பயணிக்கிறார்கள், எத்தனை வாகனம் தேவைப்படுகின்றன ? இந்த விவரங்களை அளித்து பேருந்துகளைப் பெற்றுக் கொள்ளலாம்.
மேலைம், என்ன காரணத்திற்காகப் தேவைப்படுகிறது. இ – பாஸ் அனுமதி உள்ளதா உள்ளிட்ட விவரங்கள் கேட்கப்படும். பின்னர் அனைத்தும் சரி செய்யப்பட்டு விட்டால் பேருந்து வாடகை முறையில் வழங்கப்படும்.
இதேபோல தொழில் நிறுவனங்களும் தங்கள் தேவைகளைத் தெரிவித்து வாடகைக்கு பேருந்தைப் பெற்றுக் கொள்ளலாம். தினமும் எத்தனை ஊழியர்கள் பயணம் செய்வார்கள் என்ற விவரங்களைக் கொடுத்தால் அதற்கு ஏற்ப பேருந்துகள் வழங்கப்படும் என போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர். குறிப்பாக மலைப் பகுதிகளுக்கு கி.மீ-க்கு 55 ரூபாய், சமதள பகுதிகளுக்கு 45 ரூபாயும் கட்டணம் வசூல் செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.