விழுப்புரம் ஆற்றுத்திருவிழாவிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதிகளான பிடாகம், குச்சிப்பாளையம் கண்டாச்சிபுரம் வட்டத்திற்குட்பட்ட அரகண்டநல்லூர், மணம்பூண்டி திருவெண்ணெய்நல்லூர் வட்டத்திற்குட்பட்ட ஏனாதிமங்கலம், பையூர், பேரங்கியூர் ஆகிய இடங்களிலும் மற்றும் ஆற்று கரையோரப்பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் 5-ம் நாள் ஆற்றுத்திருவிழாவில் அதிகளவில் பொதுமக்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டும் நாளை 18.01.2022 நடைபெறவுள்ள ஆற்றுத்திருவிழாவின் போது சுமார் 50000-க்கும் அதிகமானவர்கள்; கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக அரசின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திருவிழா கூட்டங்கள் பெரிய அளவிலான கூட்டங்கள் மற்றும் சிலை ஊர்வலங்கள் அனுமதிக்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் திறந்த வெளி இடங்களில் நடைபெறும். மதம் சார்ந்த கூட்டங்களுக்கு அந்த இடத்தின் மொத்த பரப்பளவில், 50 சதவிகிதம் நபர்கள் மட்டும் உரிய சமூக விலகலை பின்பற்றி கலந்து கொள்ளலாம் என்றும் அதற்கு மாவட்ட ஆட்சித்தலைவரிடம் முன் அனுமதி பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி 18.01.2022 அன்று நடைபெறவுள்ள ஆற்றுத் திருவிழாக்கள் இடங்களில், நுழைவு மற்றும் வெளியேறும் வழிகள் எதுவும் வரையறுக்க இயலாது என்பதாலும், அதிகளவிலான பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடும்போது உரிய சமூக விலகலை கடைபிடிக்க இயலாது.
எனவே, தற்போது பரவி வரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் உருமாறிய வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதியும் விழுப்புரம் மாவட்டத்தில் தென்பெண்ணையாற்றின் கரையோரப்பகுதிகள்மாவட்டத்திலுள்ள அனைத்து ஆற்று கரையோரப் பகுதிகளிலும் நாளை 18.01.2022 நடைபெறயுள்ள ஆற்றுத்திருவிழா தடைவிதித்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.