‘அந்தாதூன்’ திரைப்படம் கடந்த 2018 ஆண்டு இந்தியில் வெளியானது. அந்த படத்தில் ஆயுஷ்மான் குரானா தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர்கள் நடித்திருந்தனர். இதனை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கிருந்தார். அந்தாதூன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தது, ரூ 40 கோடிக்கு எடுக்கப்பட்ட இத்திரைப்படம் ரூ 450 வசூல் செய்தது.
அதனை தொடர்ந்து விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றது. இப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டிற்கான மூன்று தேசிய விருதுகளை வாங்கியது. சிறந்த நடிப்பிற்க்காக ஆயுஷ்மான் குரானாவுக்கும் ,சிறந்த இந்தி படம் மற்றும் சிறந்த திரைக்கதை ஆகிய மூன்று பிரிவுகளில் விருதினை வாங்கியது. படத்தின் தமிழ் ரீமேக்கை ‘பொன்மகள் வந்தால்’ படத்தின் இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் இயக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அந்தாதூன் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிகர் பிரசாந்த், கே.எஸ்.ரவிக்குமார், சிம்ரன் உள்ளிட்டோர்கள் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு “அந்தகன்” என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து “அந்தகன்” படத்தில் இருந்து இயக்குநர் ஜே ஜே ஃப்ரெட்ரிக் தற்போது விலகியுள்ளார்.
இந்நிலையில் இப்படத்தை நடிகர் பிரஷாந்த்தின் தந்தையும், நடிகருமான தியாகராஜன் இயக்கவுள்ளதாக தற்போது அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அந்தகன் படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதில் பிரசாந்த் சிம்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளனர்.