உயிரிழந்ததாக கருதப்பட்ட அல்-கொய்தா தலைவர் அய்மான் ஜவாஹிரி மீண்டும் வீடியோவில் தோன்றி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்.
ஒசாமா பின்லேடனின் இறப்பிற்குப் பிறகு அல்-கொய்தா இயக்கத்தின் தலைவராக அய்மான் ஜவாஹிரி இருந்தார். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகின. ஆனால் அல்-கொய்தா பயங்கரவாத அமைப்பு இதனை உறுதி செய்யவில்லை. அதே வேளையில் அய்மன் அல்-ஜவாஹிரி உயிருடன் இருப்பதற்கான எந்தவித ஆதாரங்களும் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நடந்து 20 ஆண்டுகள் கழிந்த நிலையில் அல்-கொய்தா தலைவர் அய்மான் ஜவாஹிரி மீண்டும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 61 நிமிடம் ஓடக்கூடிய வீடியோவில் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் காணப்படுகிறார். ஜிவாஹிரி “ஜெருசலேம் ஒருபோதும் யூதமயமாக்கப்படாது” என கூறினார். அல்-கொய்தாவின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து பேசியவர், கடந்த ஜனவரி மாதம் சிரியாவில் உள்ள ரக்கா நகரில் ரஷிய படைகளை குறிவைத்து அல்-கொய்தா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலை பாராட்டினார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் 20 வருட போருக்கு பின் தோல்வியுடன் வெளியேறியதாகவும் அவர் குறிப்பிட்டார். ஆனால் இந்த வீடியோவில் தலிபான்கள், ஆப்கானிஸ்தானை கைப்பற்றியது குறித்து அல்-ஜவாஹிரி ஏதும் கூறவில்லை என்பது குறிப்பிடதக்கது. இதற்கு முன்னதாக அல்கொய்தா தலைவர் அய்மான் அல்-ஜவாஹிரி எழுதிய 852 பக்க புத்தகம் ஒன்றும் டெலிகிராமில் வெளியிடப்பட்டுள்ளது. சா.கற்பகவிக்னேஷ்வரன்