புதுடில்லி: ‛
தேசிய அளவில் கொரோனா தொற்றின் 3வது அலை வாய்ப்பு குறைவு என்றாலும், பள்ளிகள் திறப்பில் அரசுகள் அவசரம் காட்ட வேண்டாம் என்று ஐ.சி.எம்.ஆர் முன்னாள் விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேட்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா தொற்று உடலின் ஒவ்வொரு உறுப்பிலும் தாக்கம் செலுத்தக் கூடியது. கொரோனா தாக்கத்தின் காரணமாக நீண்ட நாள் பக்க விளைவுகளில் குழந்தைகளும் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
எனவே பள்ளிகளை திறப்பதில் அச்சம் நீங்கிய அணுகுமுறை தேவை. மாவட்ட நிர்வாகங்கள் பள்ளி திறப்பது பற்றி முடிவெடுக்க வேண்டும். உள்ளூர் நிலவரங்களின் படியே திறக்கப்பட வேண்டும் என விஞ்ஞானி டாக்டர் ராமன் கங்காகேட்கர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தொற்றின் பரவலுக்கான அடிப்படைக் காரணம் மக்கள் தொகை அடர்த்தி, போக்குவரத்து, புலம் பெயர்வு போன்றவையே. கொரோனா தொற்றின் தீவிரம் மற்றும் பரவல் மாநிலத்துக்கு மாநிலம் வேறுபடவே செய்யும். எனவே பலவீனமான பகுதிகளில் 3வது அலை ஏற்படலாம் என்று விஞ்ஞானி ராமன் கங்காகேட்கர் தெரிவித்தார்.
மேலும் கல்வியும் அவசியம் தான். ஆனால், நோய் – கல்வி இடையே சமச்சீரான அணுகுமுறை தேவை. கொரோனா நமக்கு பல பாடங்களை கற்றுக் கொடுத்திருக்கிறது. தொடர்ந்து கற்றுக் கொண்டு நெகிழ்வுத் தன்மையுடன் முடிவுகளை எடுப்பதுதான் சிறந்தது என்று விஞ்ஞானி ராமன் கங்காகேட்கர் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.