பிரேசிலியா:-
முகக்கவசம் அணிய மறுத்து பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதிபர் ஜெய்ர் போல்சனாரோவுக்கு கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து, அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று உறுதியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து தனது வழக்கமான அலுவலக பணிகளை மேற்கொள்ள அலுவலகம் வராமல் தவிர்த்தார். தனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தகவலை அதிபர் போல்சனாரோ இன்று டி.வி. வாயிலாக அளித்த பேட்டியில் தெரிவித்தார். தற்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், உடல் நிலை சீராக உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக ஜெய்ர் போல்சனாரோ கூறுகையில்:-
நான் நலமாக உள்ளேன். எனது முகத்தை பாருங்கள், என்று மாஸ்கை கழட்டி காட்டினார். மேலும் எனக்கு தொற்று பாசிட்டிவ் என்று வந்துள்ளது. ஆனால் நான் நலமாக உள்ளேன். எனக்காக பிரார்த்தனை செய்தவர்களுக்கு நன்றி, கடவுளுக்கு நன்றி. அதே போல் என்னை விமர்சிப்பவர்களுக்கு நன்றி. என்னை விமர்சிப்பவர்களை பற்றி நான் கவலை கொள்ள போவதில்லை என்றும் கூறினார்.
கொரோனா வைரஸால் உலகமே கடும் அச்சத்தில் இருக்கும் வேளையில், மக்கள் சமூக விலகல், முக்கவசம் அணியத் தேவையில்லை சுதந்திரமாக நடமாடுங்கள் என்று பிரச்சாரம் செய்தவர் தான் ஜெய்ர் போல்சனாரோ. மேலும் பொது இடங்களுக்கு மாஸ்க் அணியாமல் செல்வது, பொதுமக்களிடமும் கைகுலுக்குவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்தார்.
மக்கள் ஊரடங்கால் வீட்டுக்குள் முடங்கி கிடந்தால், கொரோனாவால் ஏற்படும் பாதிப்பைவிட மோசமான பொருளாதார பாதிப்பு ஏற்படும், எனவே மக்கள் வெளியே வந்து சுதந்திரமாக பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடுங்கள் என தொடர்ந்து பேசி வந்தார் ஜெய்ர் போல்சனாரோ.
அவர் போல்சனாரோவும் வெளியே சென்றால் முகக்கவசத்தை அணிவதில்லை. தலைநகர் பிரேசிலியாவை விட்டு அதிபர் போல்சோனாரோ எங்கு சென்றாலும் அவர் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும், உத்தரவை அவர் மதிக்காவிட்டால் அவர் நாள்தோறும் 390 டாலர் அபராதம் செலுத்த வேண்டும் என்று பிரேசில் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.
பிரேசில் அதிபருக்கு ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று, வைரஸின் உண்மைத்தன்மையை மக்களுக்கு உணர்த்தியுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு கருத்து தெரிவித்துள்ளது.
உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. இதுவரை பிரேசில் நாட்டில் 16 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 67 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளனர்.