விமான நிலையம் நிலப்பரப்பில் மட்டுமே அமைக்க முடியும். ஆனால் விமான நிலையத்தைக் கடலில் அமைக்க முடியுமா? , அதுவும் சர்வதேச விமான நிலையமாக. இவ்வாறு செய்வது சாத்தியமா என்ற பல கேள்விகளுக்கு ஆம் என கூறி சாத்தியப்படுத்தி உள்ளது ஜப்பான்.
கடல் நடுவே செயற்கைத் தீவு ஒன்றை உருவாக்கி,அதன் மீது பிரமாண்டமான விமான நிலையத்தையும் அமைத்திருக்கிறது. அங்குள்ள கன்சாய் மாகாணத்தை ஒட்டிய ஓசாகா கடல் பகுதியில்தான் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு “கன்சாய்” என பெயரிட்டு உலகிலேயே கடலில் அமைக்கப்பட்ட முதல் விமான நிலையம் என்ற பெருமையை பெற்றுள்ளது ஜப்பான்.
இத்தாலியைச் சேர்ந்த ரென்கோ பியானோ என்ற கட்டிடக்கலை நிபுணரின் வடிவமைப்பை அடிப்படையாகக்கொண்டு இந்த விமான நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு அடித்தளம் நான்கு மேல் தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் மொத்த பரப்பளவு 4 லட்சத்து 53ஆயிரத்து 993 சதுர மீட்டர். இதனின் உயரம் 36 புள்ளி 64 மீட்டர் ஆகும்.
1987 ஆம் ஆண்டு விமான நிலையத்துக்கான கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட பகுதியில் கடல் நீரை வெளியேற்றிவிட்டு, ஜப்பானில் உள்ள மலைக்குன்றுகள் தகர்கப்பட்டு அதன் மூலம் கிடைத்த கல் மற்றும் மண்ணைக்கொண்டு நிரப்பி கட்டுமானப்பணிகள் நடைபெற்றுள்ளன.
அதன்பின் கட்டிடம் கட்டும் பணிகள் 1991 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கியது. இப்பணி 1994 ல் முடிந்து விமான நிலையம் திறக்கப்பட்டது. கடல் மேலே பிரமாண்டமாக அமைக்கப்பட்ட இந்த விமான நிலையத்தை உருவாக்க அந்த காலத்திலேயே இந்திய மதிப்பில் 67ஆயிரத்து 500 கோடி ரூபாய் செலவானதாம். இது போன்ற கடின உழைப்பால் தான் ஜப்பானியர்கள் இன்றும் பிறநாட்டினரை பிரம்மிப்பில் ஆழ்த்துகின்றனர்.