பீஜிங் :
சீனாவில் திருமணமான தம்பதியர் 3 குழந்தைகளை பெற்றுக் கொள்ள வகை செய்யும் சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சீனாவில் 1980 ஆண்டுகளில் குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தின் கீழ் நாம் இருவர் – நமக்கு ஒருவர் என்ற திட்டம் மூலம் ஒரு தம்பதிக்கு ஒரு குழந்தை கொள்கை அறிமுகமானது.. இதனால் சீனாவில் பிறப்பு விகிதம் குறைந்து.
இதனால் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வந்தது. இதைத் தொடர்ந்து 2016 ஆம் ஆண்டு சீன அரசு, நாம் இருவர் – நமக்கு இருவர் என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் தம்பதியர் இரு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள சீன அரசு அனுமதி அளித்தது.
ஆனால் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினங்கள் காரணமாக, சீன மக்கள் ஒரு குழந்தைக்கு மேல் பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டவில்லை. இதனால், சீனாவில் இளம் வயதினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து விட்டது.
.
இந்நிலையில் சமீபத்தில் சீன நாட்டின் மக்கள் தொகை புள்ளி விபரம் வெளியானது. அதில், சீன மக்கள் தொகை 141 கோடி என்ற அளவில் மிகக் குறைவான வளர்ச்சியை கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
மேலும் அடுத்த ஆண்டு முதல், சீனாவின் மக்கள் தொகை மேலும் குறையத் துவங்கும் என குறிப்டப்பட்டிருந்தது. இதே நிலை தொடர்ந்தால் 2027 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை சீனாவை விஞ்சி விடும் என ஐ.நா.,வும் தெரிவித்திருந்தது.
இதையடுத்து, வேலை செய்யும் திறனுள்ள இளைஞர்களின் பற்றாக்குறை, பெண்கள் கருத்தரிப்பதில் தேக்க நிலை, முதியோர் எண்ணிக்கையும், பராமரிப்புச் செலவும் அதிகரித்து வருவது போன்ற சவால்களை சமாளிக்க, மூன்று குழந்தை சட்டத்தை சீனா அறிமுகப்படுத்தி உள்ளது.
மூன்று குழந்தை பெறும் தம்பதிக்கு, நிதி, வரி, காப்பீடு, கல்வி, வீட்டு வசதி, வேலைவாய்ப்பு ஆகியவற்றில் பல்வேறு சலுகைகளை வழங்க, புதிய சட்டம் வகை செய்கிறது. இந்த ஊக்கச் சலுகைகள் காரணமாக, குழந்தை பிறப்பு அதிகரிக்கும் என சீனா அரசு கருதுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.