இஸ்லாமாபாத்:-
தடுப்பூசி போட்டுக் கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படமாட்டாது என சிந்து மாகாண அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
பாகிஸ்தானின் மொத்த மக்கள் தொகை 22 கோடி, இதில் 2 கோடியே 20 லட்சம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
தினமும் 2 லட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போட்டு வருவதாக கூறப்படுகிறது. ஆனால் தடுப்பூசியால் உடலில் பக்கவிளைவுகள் ஏற்படும் என்று வதந்திகள் பரவி வருகின்றன. எனவே மக்களில் பலர் ஊசி போட முன்வரவில்லை.
இதில் பாமர மக்கள் மட்டுமின்றி, படித்தவர்களும், அரசு பணிகளில் இருப்பவர்களும் கூட ஊசி போட தயங்குகிறார்கள்.
இதனிடையே இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய டெல்டா வகை வைரஸ்கள் பாகிஸ்தானிலும் பரவத் தொடங்கி உள்ளது. சிந்து மாகாணத்தில் அதிகமாக இவ்வைரஸ் தொற்று காணப்படுகிறது.
இந்த வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்பதால் தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்த பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருகிறது.
முதல்-மந்திரி முராத் அலிஷா
இதனைத் தொடர்ந்து தடுப்பூசி போட்டுக்கொள்ளாத அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாது என்று சிந்து மாகாண முதல்-மந்திரி முராத் அலிஷா அறிவித்துள்ளார். இது சம்பந்தமாக நிதித்துறைக்கு அரசு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறது.