புதுடில்லி:
லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் டெல்டா வகை வைரஸ்களின் தாக்கம், தடுப்பூசிகள் திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்தாண்டு டெல்டா வகை வைரஸ் அதிக தொற்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொரானா தொற்று பாதிப்பு பற்றி தெளிவாக அறிய சுமார் 30 லட்சம் பேரின் பி.சி.ஆர்., பரிசோதனைகளை ஆய்வு செய்தனர். அதில் பைசர் மற்றும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசிகளின் ஆற்றலை டெல்டா வகை வைரஸ் மழுங்கடித்தது தெரியவந்ததாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
எனவே தடுப்பூசி மூலம் மக்கள் கூட்டத்திடம் நோய் எதிர்ப்பு சக்தி ஏற்படுமா? என்பது சந்தேகம் தான் என ஆய்வில் பங்கேற்ற பேராசிரியர் சாரா வாக்கர் கூறியுள்ளார்.
கொரானா தடுப்பூசி போட்டவர்களிடமே டெல்டா வகை வைரஸ் தொற்று காணப்படுவதால், தடுப்பூசி போடாதவர்களுக்கு அவ்வகை வைரஸ் அதிக ஆபத்தை ஏற்படுத்தக் கூடும்,” என ஆக்ஸ்போர்டு பல்கலையின் மருத்துவ புள்ளியியல் மற்றும் தொற்றுநோயியல் பேராசிரியர் சாரா வாக்கர் தான் பங்கேற்ற புதிய ஆய்வின் அடிப்படையில் கூறியுள்ளார்.
மேலும் இது பற்றி பேசிய சாரா வாக்கர், “அதிக மக்களுக்கு தடுப்பூசி போடுவதன் மூலம் தடுப்பூசி போடாதவர்களையும் காக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால் தடுப்பூசி போட்டவர்களிடமே தொற்று பாதிப்பு ஏற்பட்டவுடன் அதிக வைரஸ் காணப்படுகிறது. இதன்படி தடுப்பூசி போடாதவர்கள் அதிக ஆபத்தில் இருப்பார்கள். இது அச்சத்தை ஏற்படுத்துகிறது.” என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.