புதுடில்லி:-
சீனாவின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியாவுக்கு சொந்தமான அக்சய் சின் பகுதியை மீட்க வேண்டிய நேரம் இது தான் என்று லடாக் எம்.பி. ஜம்யாங் செரிங் நம்க்யால் தெரிவித்துள்ளார்.
கிழக்கு லடாக்கில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவத்தினர் உடனான மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். சீன ராணுவம் தரப்பில் 43 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் சீன தரப்பு இதுகுறித்த விவரங்களை வெளியிடவில்லை. கடந்த ஒன்றரை மாதமாகவே, எல்லையில் சீனா படைகளை குவித்ததால் பதற்றம் ஏற்பட்டது. இந்திய தரப்பிலும் ராணுவ வீரர்களும் குவிக்கப்பட்டனர். ஜூன் 6ம் தேதி நடந்த ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தையில், இந்தியாவும், சீனாவும் மீண்டும் தங்களுடைய பழைய நிலைக்கே திரும்ப ஒப்புகொண்டுள்ளன.
இந்நிலையில் திடீரென தன்னுடைய நிலையை தன்னிச்சையாக மாற்றி கொண்ட சீனா, இந்தியாவிற்கு சொந்தமான கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில், கூடாரங்களை அமைத்து கண்காணிப்பு கோபுரம் அமைக்க முயன்றுள்ளது. அத்துமீறி நுழைந்த சீன படைகளின் கூடாரங்களை இந்திய வீரர்கள் அகற்ற முயன்ற போது மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தனியார் டிவி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், லடாக் யூனியன் பிரதேசத்தின் பா.ஜ.க. எம்.பி நம்க்யால் கூறியிருப்பதாவது:
சீனாவில் கட்டுப்பாட்டில் உள்ள அக்சய் சின் மட்டுமல்லாது, கில்ஜிட்-பல்டிஸ்தான் போன்ற பகுதிகளும் லடாக்கின் ஒரு அங்கமாகும். இது ஒன்றும் 1962ம் ஆண்டு இருந்த இந்தியா அல்ல. 2020ம் ஆண்டில் உள்ள இந்தியா. கில்ஜிட்-பல்டிஸ்தான் ஆகிய பகுதிகளில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் என்று கூறுவது போல அக்சய் சின் பகுதியை சீன ஆக்கிரமிப்பு லடாக் என்று கூற வேண்டும். மேலும் அது அக்சய் சின் (Aksai Chin) அல்ல, அது அக்சய் இந்தியா (Aksai India).
எனவே, இந்திய மேய்ப்பர்கள் தங்கள் பாரம்பரிய மேய்ச்சல் நிலங்களுக்குச் செல்ல வேண்டும். சீனா அவர்களுக்கு அனுமதியை மறுத்தால், இந்திய நிலப்பரப்பை மீட்டெடுக்க வேண்டும். எல்லையை பாதுகாப்பதில் உள்ளூர் மக்களுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. 5,000 சதுர கி.மீ. பரப்பளவு ஷக்ஸ்கம் பள்ளத்தாக்கு (Shakshgam Valley) பகுதி பாகிஸ்தானால் சீனாவிற்கு தரப்பட்டுள்ளது.
இது உண்மையில் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி, எனவே நாம் அவற்றை மீட்க வேண்டிய நேரம் இது. எனவே நாம் அவற்றை கட்டாயம் மீட்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.