இந்தியாவில் தொடக்கத்தில் அதிகமாக இருந்த கொரோனா தொற்று படிப்படியாக குறைந்த நிலையில் தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. நாட்டின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் இதனை தடுப்பதற்கு மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும் தொற்று குறைந்தபாடு இல்லை .
இந்நிலையில் டெல்லி, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவல் கை மீறி சென்றுள்ளதால் மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மேலும் பல நோயாளிகளுக்கு ஆக்சிஜன் கிடைக்காததால் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். இப்பிரச்சனையை சமாளிப்பதற்கு மத்திய மாநில அரசுகள் திணறி வருகின்றன.
கொரோனாவுக்கு எதிரான போரில் இந்தியாவிற்கு உதவ சீனா முன்வந்துள்ளது. இது தொடர்பாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியாவுடன் சீனா தொடர்பில் இருக்கிறது. “தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் சீன அரசாங்கமும் மக்களும், இந்திய அரசாங்கத்தையும் இந்திய மக்களையும் உறுதியாக ஆதரிக்கின்றனர். மேலும், இந்தியத் தரப்பின் தேவைகளுக்கு ஏற்ப ஆதரவையும் உதவிகளையும் வழங்க தயாராக உள்ளனர் என குறிபிட்டுள்ளார்.