சேலம் மாவட்டத்தில் கொரானா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி இன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் 8:00 மணிக்கு டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுகின்றன.
இந்நிலையில் காலையில் டாஸ்மாக் கடைக்கு சென்று இரண்டு மதுபான பெட்டிகளை வாங்கிய மர்ம நபர்கள் 2 பேர் இருசக்கர வாகனத்தில் வைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வழியாக வந்துள்ளனர். அப்போது ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சாலையில் தவறி இரண்டு பெட்டிகளும் சாலையில் விழுந்துள்ளது. இதனையடுத்து பெட்டில் இருந்த மது பாட்டில்கள் உடைந்து மதுபானங்கள் சாலையில் கொட்டியதால் அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள் அதை அங்கேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்..
இதையடுத்து சாலைகளில் மதுபானங்கள் கொட்டப்பட்டு கிடந்த காட்சியை கண்ட சாலையில் சென்றவர்கள் அவசர அவசரமாக ஓடி வந்து மதுபாட்டில்களை எடுக்கத் தொடங்கினர்.
இதனை அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவர்களை களைத்து சாலையில் உடைந்து விழுந்த மதுபாட்டில்களை அப்புறப்படுத்த தொடங்கினர். பிறகு தடுப்பு ஏற்படுத்தி உடைந்த பாட்டில்கள் அனைத்தும் சுத்தம் செய்த பிறகு போக்குவரத்திற்கு அனுமதித்தனர். சாலையில் சென்ற பொதுமக்களுக்கு மது பாட்டில்கள் இலவசமாக சிக்கிய சம்பவம் மது பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது