பிரபல எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான கி.ராஜநாராயணன் வயது மூப்பின் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று நள்ளிரவு காலமானார். 1923 செப்டம்பர் 16-ல் கோவில்பட்டி அருகே இருக்கும் இடைச்செவல் கிராமத்தில் பிறந்த இவருக்கு ‘கோபல்லபுரத்து கிராமம்’ என்ற நாவலுக்காக சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
புதுச்சேரி லாசுப்பேட்டையில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வந்த கிரா (98) உடல்நல குறைவால் இயற்கை எய்துள்ளார். இவரின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் முதல் பல்வேறு பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் கி.ராவின் மறைவுக்கு நடிகர் சிவகுமார் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் பிறந்த பத்து மாதத்தில் என் தந்தையை இழந்துவிட்டேன். தற்போது 80 வயதில் எனது ஞானத்தந்தை, 99 வயது வாழ்ந்த, கி.ரா அவர்களை இழந்துவிட்டேன். கி.ரா அவர்களும், கணபதி அம்மாளும் எனக்கு இன்னொரு தாய் தந்தையர். எனக்கும் அவருக்கும் 35 வருடகாலமாக உறவு உண்டு. அவர் சம்பந்தபட்ட பல விழாக்களில் பாண்டிச்சேரி சென்று கலந்துகொண்டிருக்கிறேன்.
அந்த மகத்தான மனிதர் கரிசல் மண்ணைப் பற்றி எழுதிய‘கோபல்ல கிராமம்’, ‘கோபல்ல கிராமத்து மக்கள்’, ‘கரிசல்காட்டு கடுதாசி’, ‘வட்டார வழக்கு சொல்லகராதி’ போன்ற அழியாத படைப்புகளால் என்றென்றும் இந்த மண்ணில் வாழ்ந்துகொண்டிருப்பார். அவரது ஆத்மா சாந்தியடையட்டும். இந்த கரோனா பொது முடக்கத்தால் அவரது உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செய்ய முடியாததற்கு மனமார வருந்துகிறேன். மீண்டும் அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறேன். பிரார்த்திக்கும், சிவகுமார்” என கூறியுள்ளார்.