சென்னை:-
ரஷ்யாவிலிருந்து சிவாலயங்களை தரிசிக்க இந்தியா வந்த கோடீஸ்வரர் ஒருவர் ஊரடங்கு காரணமாக மீண்டும் சொந்த நாடு திரும்ப முடியாமல், கையிலிருந்த பணத்தையும் இழந்து, மொழி தெரியாமல் பட்டினியோடு சுற்றிக் கொண்டிருந்த சிவபக்தர் ஒருவருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
கையில் ருத்தராட்ச மாலை, கழுத்தில் சிவன் டாலர், செல்போன் திரையில் சிவன் படம், முழு உடலை மறைக்கும் கருப்பு ஆடையில் உள்ள இவர் பெயர் ருஸ்லான். கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற சிவாலயங்களை தரிசிப்பதற்காக வந்துள்ளார்.
மகாசிவராத்திரி அன்று வாரணாசியில் தரிசனத்தை முடித்த கையோடு தமிழகம் வந்த ருஸ்லான், திருவண்ணாமலை ராமேஸ்வரம், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வழிப்பட்ட பின்னர் சென்னை வந்துள்ளார்.
கடந்த மார்ச் 28ம் தேதி கொல்கத்தா சென்று பின்னர் ரஷ்யா செல்ல திட்டமிட்டிருந்த நிலையில், மார்ச் 24ம் தேதியே ஊரடங்கு அமலுக்கு வந்ததால் சென்னையில் முடங்கிவிட்டரார் ருஸ்லான். கையிலிருந்த பணமும் தீர்ந்துவிட, கிரெடிட் டெபிட்கார்டுகள் வைத்திருந்த பர்ஸும் தொலைந்துப்போனது. ரஷ்ராவில் பணக்காரரான இவர் உணவுக்கே வழியின்றியும் தங்க இடமின்றியும் சென்னையில் மூன்று வாரங்களாக திரிந்து வந்துள்ளார்.
இவர் கதையைக் கேட்ட வழிப்போக்கர் ஒருவர் தான் சென்னை மாநகராட்சியை அணுகுமாறு கூறவே, ரிப்பன் கட்டிடத்தில் உள்ள பயணங்களுக்கான பாஸ் வழங்கும் கவுன்ட்டருக்கு வந்து சேர்ந்தார் ருஸ்லான்.
கொரோனா பீதி காரணமாக அங்கிருந்த அனைவரும் அச்சத்தோடு இவரைப் பார்த்ததால் ஒரு ஓரமாக அமரவைக்கப் பட்டிருந்தார் ருஸ்லான்.
அவரை விசாரித்த அதிகாரிகள், பாஸ்போர்ட் விசா போன்ற விவரங்களை ஆராய்ந்து சேகரித்த பின்னர் மாநகராட்சி தங்குமிடத்திற்கு அனுப்ப நடவடிக்கைகளை எடுத்தனர். இதனிடையே ருஸ்லான் பசியோடு இருப்பதை உணர்ந்து அவருக்கு உடனடியாக உணவும் தண்ணீரும் வழங்கப்பட்டது.
காய்ச்சல் அறிகுறி ஏதும் உள்ளதா என பரிசோதனை செய்த பின்னர் மாநகராட்சி தங்குமிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் ருஸ்லான்.
ரஷ்யாவில் பெரும் செல்வந்தரான இவரை கொரோனாவும், காலமும் சேர்ந்து நடுரோட்டில் நிறுத்தி விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.