விசாகப்பட்டினம்:-
விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவு காரணமாக மனிதர்கள், விலங்குகள் உயிரிழந்துள்ள நிலையில் மரம் செடி கொடிகள் கூட கருகிய உள்ளதால் பொதுமக்கள் பெரும் அச்சமடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் எல்ஜி பாலிமர் நிறுவனத்தில் ஸ்டைரீன் வாயு கசிவு ஏற்பட்டு விஷவாயு தாக்கி 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 300க்கும் மேற்பட்டோர் தற்போது வரை மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 22 கால்நடைகள், 6 நாய்கள் மற்றும் ஒரு வளர்ப்பு பூனை ஆகியவை உயிரிழந்தன.
இந்நிலையில் இந்த விஷவாயு தாக்கம் மனிதர்கள் மட்டுமல்லாது அப்பகுதியில் உள்ள மரம், செடி, கொடிகளும் முற்றிலுமாக கருகிய நிலையில் காணப்படுகின்றன. மரம், செடி, கொடிகளை விஷவாயு தாக்கியுள்ளது அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனத்தை மூட வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே மாநில தொழில் துறை அமைச்சர் கௌதம் ரெட்டி கூறுகையில்:-
இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நிலைமை சீரடையும். மேலும் எல்ஜி பாலிமர் தொழிற்சாலையை சுற்றி ஐந்தாறு கிலோமீட்டர் சுற்றளவில் வாயுத் தாக்குதலின் வீரியத்தை குறைப்பதற்கு தண்ணீர் தெளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுதொடர்பாக புனே, மும்பை, குஜராத் ஆகிய பகுதிகளில் இருந்து நிபுணர் குழுவும் வரவழைக்கப்பட்டு உள்ளது என்றார்.