பிரதமர் மோடியின் பஞ்சாப் பயணத்தின் போது ஏற்பட்ட பாதுகாப்பு குளறுபடிகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. நாட்டையே உலுக்கிய இச்சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள், திரைத்துறை மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
விளையாட்டு வீராங்கனையான சாய்னா நேவால், “எந்தவொரு நாட்டின் பிரதமரின் பாதுகாப்பும் சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னைத்தானே பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பஞ்சாப்பில் பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன்” என சமூக வலைத்தளத்தில் விமர்சித்திருந்தார். சாய்னாவின் இந்த ட்வீட்டிற்கு நடிகர் சித்தார்த் தெரிவித்த பதிலில் ஆபாசமாக பொருள் கொள்ளும்படியான வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக அவருக்கு எதிராக சமூக வலைதளங்களில் சர்ச்சை உருவானது.
இந்த விவகாரத்தில் தலையிட்டுள்ள தேசிய மகளிர் ஆணையம் சித்தார்த் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மராட்டிய காவல்துறைக்கு கடிதம் எழுதியுள்ளது. மேலும், சித்தார்த்துக்கு நோட்டீஸும் அனுப்பியுள்ளது.