கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாரடைப்பால் காலமானார்.
கொரோனா தொற்று காரணமாக ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். மேலும் அவரது மனைவி, மூத்தமகன் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
கடந்த சில தினங்களுக்கு முன்பதாக அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்பட்டது. அவரது சிகிச்சைக்கு கூட குடும்பத்தார் பணிமின்றி தவித்தனர். பின்னர் நடிகர் சிரஞ்சீவி பணஉதவி அளித்தார்.
இந்நிலையில், தற்போது அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். பல்வேறு மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றியுள்ளார் சிவசங்கர்.
‘மகாதீரா’ படத்திற்காக தேசிய விருதும் பெற்றுள்ளார். பூவே உனக்காக , விஷ்வதுளசி, வரலாறு , உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். 2003 ஆம் ஆண்டில், திருடா திருடி படத்தின் புகழ்பெற்ற பாடலான மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் மேலும் அதிகமானது.
சிவசங்கர் நடன இயக்குநர் மட்டுமின்றி, கே. எஸ். ரவிக்குமாரின் வரலாறு , பாலாவின் வரலாற்று நாடகப் படமான பரதேசி ஆகிய படத்தில் நடித்துள்ளார். இவரது மரணம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.