இந்தியாவில் தனியார் கிரிப்டோ கரன்சியை தடை செய்யும், ரிசர்வ் வங்கி மூலம் அதிகாரப்பூர்வ கிரிப்டோகரன்சியை உருவாக்கவும் வழிவகை செய்யும் சட்ட மசோதாவை நடப்பு குளிர்கால கூட்டத் தொடரில் அறிமுகம் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
தனியார் கிரிப்டோகரன்சிகளால் ஆபத்து இருப்பதாக ஏற்கெனவே ரிசர்வ் வங்கி ஆளுநர் எச்சரித்திருந்தார். தற்போது கிரிப்டோகரன்சி எனப்படும் மெய்நிகர் நாணயம் உலகம் முழுவதும் பிரபலமடைந்து வருகிறது. 2009ம் ஆண்டு பிட் காயின் வருகைக்கு பின்னர் கிரிப்டோகரன்சிகளின் வளர்ச்சி அபரிமிதமானது.
அப்போது நூறு ரூபாய்க்கும் குறைவாக இருந்த ஒரு பிட் காயின் (Bitcoin) மதிப்பு தற்போது 50 லட்சத்துக்கும் மேல். ஆனால் இத்தகைய கரன்சிகள் மூலம் டார்க் வெப்பில் போதைப்பொருள் விற்பனை, ஆயுத விற்பனை போன்றவையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ரிசர்வ் வங்கியின் சொந்த டிஜிட்டல் கரன்சியை வெளியிடுவதற்கு மத்திய அரசு திட்டமிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடர் நவம்பர் 29ம் தேதி தொடங்கவுள்ளது. இந்த கூட்டத் தொடரில் மொத்தம் 26 மசோதாக்களை தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அதில், கிரிப்டோகரன்சி மற்றும் அதிகாரப்பூர்வ டிஜிட்டல் நாணய கட்டுபாடு மசோதா 2021 (The Cryptocurrency and Regulation of Official Digital Currency Bill, 2021) என்ற மசோதாவும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
மத்திய அரசின் இந்த முடிவால் அனைத்து முக்கிய டிஜிட்டல் கரன்சிகளின் பங்குகளும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. பிட்காயின் சுமார் 18.53 சதவிகிதம், எத்திரியம் 15.58 சதவிகிதம் மற்றும் டெதர் 18.29 சதவிகிதம் வரை அதன் பங்குகள் வீழ்ச்சியடைந்துள்ளன.