இந்தியாவில் வரும் அக்டோபர் – நவம்பர் மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றின் 3வது அலை தீவிரமடையும் என, ஐ.ஐ.டி., கான்பூர் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மத்திய அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு உறுப்பினர் மணீந்திர அகர்வால், அக்டோபர்-நவம்பரில் கொரோனா மூன்றாவது அலை உச்சம் தொடும் எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், தற்போது பரவி வரும் மரபணு மாற்றமடைந்த கொரோனாவை விட வீரியமான, புதிய மரபணு மாற்றமடைந்த கொரோனா வைரஸ் செப்டம்பர் மாதத்திற்குள் தோன்றினால், அக்டோபர்-நவம்பர் மாதங்களில் கொரோனா மூன்றாவது அலை உச்சம் தொடலாம் எனத் தெரிவித்துள்ளார் மணீந்திர அகர்வால்.
அதேசமயம் மூன்றாவது அலை உச்சம் தொட்டாலும் அதன் தீவிரம் இரண்டாவது அலையின் தீவிரத்தில் நான்கில் ஒரு பங்குதான் இருக்குமெனவும், தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரு லட்சமாக இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில், கடந்த ஏப்ரல் – மே மாதங்களில், கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்பை ஏற்படுத்தியது. அப்போது நாட்டில் ஆக்சிஜனுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் உயிரிழந்த சம்பவங்களும் நிகழ்ந்தன என்பது குறிப்பிடத்தக்கது.