இந்தியாவில் குஜராத் மாநிலத்திலும், சென்னை மறைமலைநகர் பகுதியிலும் ஃபோர்டின் ஆலை பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. தற்போது ஃபோர்டு நிறுவனம் இந்தியாவிலிருந்து வெளியேற உள்ளதாக ஃபோர்டு நிறுவனத்தின் அமெரிக்க தலைமையகம் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஃபோர்டின் ஆலையில் பணி புரியும் 4 ஆயிரம் பேர் வேலையிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் சானந்த் நகரில் உள்ள தொழிற்சாலையில் உற்பத்தி 2021 ஆம் ஆண்டு இறுதியிலும் சென்னையிலுள்ள தொழிற்சாலையில் 2022ஆம் ஆண்டு ஜூன் மாத இறுதியிலும் பணிகள் நிறுத்தப்படும் என்றும் ஃபோர்டு நிறுவனத்தின் தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார்.
தற்போது இந்தியாவில் வாகனங்களை வாங்கியவர்களுக்கு தொடர்ந்து சேவைகளை ஃபோர்டு நிறுவனம் தனது டீலர்கள் மூலம் வழங்கி வரும் என தெரிவித்துள்ளனர்.
வேலையிழக்கும் 4000 பணியாளர்களுக்கு இழப்பீடு மற்றும் பிற நிலுவைத் தொகையை செலுத்துவதற்கு ஃபோர்டு நிறுவனம் 1.7 பில்லியன் டாலர்கள் ஒதுக்கி நிறுவனத்தின் தலைவர் அனுராக் மெஹ்ரோத்ரா தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தமிழ் நாட்டில் உள்ள மறைமலைநகரில் ஃபோர்டுக்கு மாற்றாக வேறு கார் நிறுவனத்தின் ஆலை செயல்பட அனுமதிக்கலாமா என்பது குறித்து தமிழக அரசு தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.