டெல்லி:-
ஆத்ம நிர்பார் பாரத் அபியான் திட்டத்தின் ஒரு பகுதியாக நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமான் ஐந்தாம் கட்ட பொருளாதார நடவடிக்கையை இன்று அறிவித்துள்ளார்.
தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஐந்தாம் கட்ட அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிட்டார். இதன் முக்கிய அம்சங்களை இங்கே காணலாம்.
மக்கள் பெற்ற நேரடிப் பயன்கள்:-
மே 16ஆம் தேதி வரை 8.19 கோடி விவசாயிகளுக்கு நேரடியாக தலா ரூ.2,000 வீதம் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது. ஜன்தன் கணக்கு மூலம் 20 கோடி மக்கள் பயனடைந்துள்ளனர். 6.81 கோடி பேர் இலவச எரிவாயு சிலிண்டர்களை பெற்றுள்ளனர். ஷ்ரமிக் சிறப்பு ரயில்களுக்கான கட்டணத்தில் 85 சதவீதத்தை மத்திய அரசே ஏற்கும். 15 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்கும். கொரோனாவால் ஏற்பட்டுள்ள நெருக்கடியை வாய்ப்புகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச உணவுப் பொருட்கள்:-
அரிசி, கோதுமை, பருப்பு ஆகியவை அடுத்த இரண்டு மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து மக்களுக்கு உணவுப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யும்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை:-
கொரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகளுக்கு இதுவரை ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆய்வகங்கள், சோதனை கிட்களுக்கு ரூ.550 கோடி வழங்கப்பட்டுள்ளது. 11.08 கோடி ஹைட்ராக்சிகுளோரோகுயின் மாத்திரைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இதுவரை ரூ.4,113 கோடி நிதியுதவி விடுவிக்கப்பட்டுள்ளது. தனிநபர் பாதுகாப்பு உபகரணங்கள் 51 லட்சமும், N-95 மாஸ்க்குகள் 87 லட்சமும் விநியோகிக்கப்பட்டு உள்ளன.
தொழில் சார்ந்த அறிவிப்புகள்:-
தொழில்புரிவதை எளிமையாக்க அடுத்தக்கட்ட சீர்திருத்தங்களை அரசு செய்யவுள்ளது. ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்திற்கு கூடுதலாக ரூ.40,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சிறு நிறுவனங்கள், ஒரு நபர் நடத்தும் நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் தொடர்பான அபராதங்கள் குறைக்கப்படுகிறது. நிறுவனங்களின் 7 விதிமீறல்கள் தொடர்பான நடவடிக்கைகள் கைவிடப்படுகின்றன. சொத்துகள் பதிவு எளிமையாக்கப்படும். வர்த்தக சர்ச்சைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்தும் தனியார்மயம்:-
குறிப்பிட்ட சில துறைகள் தவிர்த்து மற்ற அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார்மயமாக்கப்படும். பொது முக்கியத்துவம் வாய்ந்த துறைகள் எவை? தனியார் முதலீட்டுக்கு அனுமதிக்கப்படாத பொதுத்துறை நிறுவனங்கள் குறித்து அரசாணை வெளியிடப்படும்.
மாநிலங்களுக்கு நிதி:-
வருவாய் பற்றாக்குறை மானியமாக மாநிலங்களுக்கு ஏப்ரல், மே மாதங்களில் ரூ.12,390 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஏப்ரலில் மாநிலங்களுக்கு வரி வருவாய் பங்காக ரூ.46,038 கோடி வழங்கப்பட்டுள்ளது. மாநில பேரிடர் மீட்பு நிதியாக ஏப்ரலில் ரூ.11,092 கோடி மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மாநிலங்களுக்கு ரூ 4.28 லட்சம் கோடி கூடுதல் கடனாக கிடைக்கும்:-
மாநிலங்களுக்கு அளிக்கப்பட்ட கடன் வரம்பில் 14% மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளது. நடப்பு நிதி ஆண்டில் மாநிலங்கள் ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தி அடிப்படையில் கடன் வாங்கும் திறன் 3% இல் இருந்து 5 % ஆக உயர்த்தப்படுகிறது என்று தெரிவித்தார். மாநிலங்கள் கடன் பெறுவதற்கான உச்சவரம்பு உயர்த்தப்படுவதன் மூலம் ரூ 4.28 லட்சம் கோடி கூடுதல் கடனாக மாநிலங்களுக்கு கிடைக்கும்.
திவால் நடவடிக்கைகளில் மாற்றம்:-
கொரோனா காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்யும் வகையில் திவால் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்படும். அதாவது ஓராண்டிற்கு திவால் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்படும். சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெறும் வகையில் திவால் சட்டம் தொடர்பான விதிமுறைகளில் தளர்வு செய்யப்படும். கொரோனா நெருக்கடியால் ஏற்பட்ட கடன்கள் வாராக்கடன்களாக வரையறுக்கப்படாது.
சுகாதாரத்துறை அறிவிப்புகள்:-
பொது சுகாதாரத்திற்கு செலவிடப்படும் தொகை அதிகரிக்கப்படும். சுகாதாரத்துறைக்கு கூடுதல் நிதி ஒதுக்கப்படும். ஆரம்ப சுகாதார நிலையங்கள் மேம்படுத்தப்படும். அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் நோய் தொற்று தடுப்பு பிரிவு உருவாக்கப்படும்.
கல்வித்துறை சார்ந்த அறிவிப்புகள்:-
ஆன்லைன் கல்வி முறையை அணுகுவதற்கு உதவும் PMeVIDHYA திட்டம் உடனடியாக செயல்படுத்தப்படும். மே 30ஆம் தேதி முதல் 100 பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் படிப்புகளை தொடங்க அனுமதி அளிக்கப்படும். இ-பாடசாலை இணையதளத்தில் மேலும் 200 புதிய பாடப்புத்தகங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு சேனல்:-
பள்ளிக்கல்விக்காக ஏற்கனவே 3 சேனல்கள் உள்ளன. மேலும் 12 சேனல்கள் தொடங்கப்படும். இ-வித்யா திட்டத்தின் கீழ் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒரு தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படும். பார்வை மற்றும் செவித்திறன் குறைபாடு உள்ளவர்களுக்கு சிறப்பு டிஜிட்டல் பாடங்கள் உருவாக்கப்படும். ஸ்வயம் பிரபா சேனல்கள் மூலம் இ-லேர்னிங் எனப்படும் மின்னணு கற்றல் ஊக்குவிக்கப்படும்.