ராஞ்சி:-
ஜார்க்கண்டில், ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், முகக்கவசம் அணியாவிட்டால் ஒரு லட்சம் அபராதமும் விதிக்க வகை செய்யும் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
ஜார்க்கண்டில், கொரோனா வைரஸால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை, 6,400ஐ கடந்துள்ளது. பலி எண்ணிக்கை, 64 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மாநிலத்தில், தொற்றுநோய் அவசர சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது (Jharkhand Contagious Disease Ordinance 2020). இந்த சட்டத்திற்கு ஜார்கண்ட் மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இந்த சட்டத்தின்படி, ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி வெளியே சுற்றித்திரியும் நபர்களுக்கு, இரண்டு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் முகக் கவசம் அணியாமல் வெளியே செல்வோருக்கு, 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
எந்தெந்த மாநிலங்களில் எவ்வளவு அபராதம்???
இதுபோன்ற அபராதங்களை விதிக்கும் முதல் மாநிலம் ஜார்கண்ட் மட்டுமல்ல. பல்வேறு மாநிலங்களும் மாநகராட்சி நகராட்சிகளில் இதுபோன்ற அபராதம் விதித்துள்ளது.
அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷன் முகக் கவசங்கள் அணியாமல் வெளியே சுற்றுபவர்களுக்கு 200 ரூபாய் முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கிறது. யாரேனும் பான் பீடா கடைகளுக்கு அருகில் எச்சில் துப்பினால் பான் கடை முதலாளிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
மே மாதம் முதல் ஜூலை மாதம் வரையில் அகமதாபாத் முதல் கார்ப்பரேஷன் அபராதத் தொகையாக 1.52 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.
இதேபோல் கேரளாவில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றும் நபர்கள் முதல் முறையாக பிடிபட்டால் 200 ரூபாயும் தொடர்ந்து அதே நபர் பிடிபட்டால் 5,000 ரூபாயும் அபராதம் விதிக்கப்படுகிறது. இதேபோல் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் முகக் கவசம் அணியாமல் சுற்றும் நபர்களுக்கு முதல்தடவைலேயே 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
ஹரியானா மாநிலத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தாலோ, பொது இடங்களில் எச்சில் துப்பினாலோ 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது.
புனே மாநகராட்சி முகக் கவசம் அணியாமல் வெளியே சுற்றும் நபர்களிடமிருந்து 500 ரூபாய் அபராதம் வசூலிக்குமாறு சுகாதாரத் துறை ஆய்வாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதுபோல ஊரடங்கு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு ஒன்று முதல் ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் புனே மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
டெல்லியில் முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்கள் செக்ஷன் 188ன் கீழ் ஆறு மாதங்கள் சிறை தண்டனையும், 200 முதல் 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று டெல்லி தலைமைச் செயலாளர் விஜய் தேவ் தெரிவித்துள்ளார்.
சட்டீஸ்கர் மாநிலத்தில் மூன்று அடுக்கு முகக்கவசம் அல்லது துணி மூலம் கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது, மீறுபவர்கள் செக்ஷன் 118 கீழ் ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஒடிஷா மாநிலத்தில் முகக் கவசம் அணியாமல் வெளியில் சுற்றுபவர்களுக்கு முதல் மூன்று முறை 200 ரூபாய் அபராதம் விதிக்கவும், நான்காவது தடவையில் இருந்து 500 ரூபாய் அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டுள்ளது.
இருப்பதிலேயே மிக குறைந்த அபராதமாக பீகார் மாநிலத்தில் முக கவசம் அணியாமல் வெளியே சுற்றும் அவர்களுக்கு 50 ரூபாய் அறிவிக்கப்பட்டுள்ளது.