குளத்துபுழா:-
கேரள மாநிலம் புனலூர் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை மகன் சுமந்து சென்ற சம்பவம் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் முறையான அனுமதி பெற்ற வாகனங்களை மட்டும் காவல்துறையினர் அனுமதித்து வருகின்றனர் . இந்நிலையில் கொல்லம் மாவட்டம் புனலூர் பகுதியில் உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை ஆட்டோவில் கொண்டு செல்ல முயன்ற போது முறையான அனுமதி இல்லாததால் காவல்துறையினர் அனுமதி மறுத்து விட்டனர்.
இதனை தொடர்ந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் வரை உடல்நலம் பாதிக்கப்பட்ட தந்தையை மகன் தோளில் சுமந்தவாறு மருத்துவமனை சென்றார். அவருடன் வயதான தாயாரும் நடந்தே சென்றார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக கேரளா மாநில மனித உரிமைகள் ஆணையம் தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.