புதுச்சேரியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாமல் இருக்க புதுச்சேரி அரசு சார்பில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம் நிவாரணம் வழங்க முதலமைச்சர் ரங்கசாமி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து வலியுறுத்திய நிலையில், அதற்கு துணைநிலை ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் ரங்கசாமி, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3 ஆயிரம் நிவாரண தொகை விரைவில் வழங்கப்பட உள்ளதாகவும், இதன் மூலம் சுமார் 3,50,000 ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.105.00 கோடி செலவாகும் என்றார்.
மேலும் பேசிய அவர், கொரோனாவில் இருந்து மக்கள், தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ள வேண்டும். அனைவரும் தடுப்பூசி போட்டு கொள்ளுங்கள். அச்சம் தேவையில்லை. முக கவசம் அணிந்து செல்ல வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். தேவையான தடுப்பூசி சுகாதாரத்துறையிடம் உள்ளது என்றார்.
தமிழகத்தில், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுக கொரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் 4,000 வழங்கப்படும் என அறிவித்திருந்த நிலையில் அதனை மு.க ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற முதல் நாளே இந்த திட்டத்தில் கையெழுத்திட்டார். மேலும் இதன் முதல் தவணையாக ரூபாய் 2000 தமிழகத்தில் வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.