முன்னாள் உயர் அதிகாரி வெங்கடாசலம் தற்கொலைக்கு காரணம் வட மாவட்டத்தைச் சேர்ந்த திமுக அமைச்சர் ஒருவர் தான் என முன்னாள் சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் பேசியிருப்பது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் தலைவராக இருந்த வெங்கடாசலம் டிசம்பர் 2-ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இவர் பதவியில் இருந்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்ந்ததாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். அதில் அவரது வீட்டிலிருந்து 8 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள், ரூ.13.5 லட்சம் ரொக்கமும் கைப்பற்றப்பட்டிருந்தன.
இந்த வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்திக்கொண்டிருந்த நிலையில், வெங்கடாசலம் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் டிசம்பர் 2ம் தேதி திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரித்து வரும் நிலையில், முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் தெரிவித்துள்ள கருத்து பரபரப்பை கிளப்பியுள்ளது.
விழுப்புரத்தில் இன்று ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம், திமுக ஆட்சியில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் போன்ற உயர் அதிகாரிகள் கூட மிரட்டப்படுவதாக குற்றச்சாட்டினார். சமீபத்தில் முன்னாள் உயர் அதிகாரி வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டார். எங்களுக்கு கிடைத்த தகவலின் படி, வெங்கடாசலம் தற்கொலைக்கு முன்பு வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் ஒருவர் 10 கோடி ரூபாய் கேட்டு பேரம் பேசியதாக தெரிகிறது. அதை இந்த திமுக அரசு மூடி மறைத்து கொண்டிருக்கிறது. நீங்கள் வெளியில் சொல்ல வேண்டும், இல்லை என்றால் நாங்கள் சொல்ல வைப்போம். யார் அந்த அமைச்சர் என நாங்கள் வெளியில் சொல்லுவோம் என திமுகவை எச்சரிக்கும் தொனில் பேசியுள்ளார்.